நாங்குநேரி: தொழில்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று நாமக்கல் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பாளை ரெட்டியார்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக வேட்பாளர் இந்த ஊரை தாங்கியே வேட்பாளராக உள்ளார். நானும் ஊர் பெயரை இணைத்து தான் பெயரை வைத்திருந்தேன். கடைசியில் எடப்பாடியார் என்ற பெயரே கிடைத்து விட்டது. உங்கள் ஊரின் பெயர் தமிழகம் முழுக்க, இந்தியா முழுக்க பரவும். எங்கள் மீதும், ஆட்சி மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. முதியவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு தொகுதிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர்.
தேர்தல் முடிந்தவுடன் விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மக்களுக்கு தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நமக்கு தேவை 15 ஆயிரத்து 450 மெகாவாட் மட்டுமே. தொழில்துறையில் நாம் பெற்றுள்ள வளர்ச்சி காரணமாக புதிய தொழில் தொடங்க பலர் முன் வருகின்றனர். தொழில் துறையிலும் இன்று தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டால் அது ஒரு போதும் நடக்காது. தாமிரபரணியாறு, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வெள்ளநீர் கால்வாய் திட்டம் 4 பகுதிகளாக நடந்து வருகிறது. அதில் 1 மற்றும் 2 பகுதிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றது. 3வது பகுதியில் 45 சதவீதம் பணிகள் நடந்துள்ளன. 4வது பகுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.